ஈரான் போர்! பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல: விக்ரம் துரைசாமி
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான போரில் பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல என விக்ரம் துரைசாமி கூறியது குறித்து...
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையேயான பொதுமக்கள், பணியாளர்கள் மீதான தாக்குதல்கள் ஏற்புடையதல்ல என்று பிரிட்டனின் இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப். 28 ஆம் தேதி இஸ்ரேல், அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அதற்கு பதில் தாக்குதலாக ஈரானும் வளைகுடா நாடுகளிலுள்ள முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றது. போர் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில் பொதுமக்கள், பணியாளர்கள் போன்றவர்களும் இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து, லண்டனில் நடைபெற்ற ஐஎம்ஓ கவுன்சிலின் 36-வது சிறப்பு அமர்வில் உரையாற்றிய பிரிட்டனுக்கான இந்திய உயர் ஆணையர் விக்ரம் துரைசாமி,
“மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள இந்தியா, சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப வணிக மற்றும் வர்த்தகக் கப்பல்களின் உரிமைகளும் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை உடனடியாகத் தணிக்க அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், அனைத்து மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம். தற்போதைய போர்ச்சூழலால் சுமார் 23,000 இந்திய மாலுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய நீர்வழிகளில், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களும், அதனால் பொதுமக்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஏற்படும் அபாயங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்தார்.
மேலும், சீனாவுக்கான அடுத்த இந்தியத் தூதராக விக்ரம் துரைசாமி விரைவில் பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.