நெல் கொள்முதல் செய்யப்படாததைக் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல்
வடுவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்படும் தாமதப்போக்கை கண்டித்து, திங்கள்கிழமை விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனா்.
திருவாரூா் மாவட்டம், வடுவூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், கொள்முதல் செய்வதில் கடைப்பிடிக்கப்படும் தாமதப்போக்கை கண்டித்து, திங்கள்கிழமை விவசாயிகள் சாலையில் நெல்லை கொட்டி மறியலில் ஈடுபட்டனா்.
மன்னாா்குடி அருகேயுள்ள வடுவூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் குறுவை நெல் சாகுபடி முடிந்து அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நெல்லை, வடுவூரில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக, கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை லாரிகளில் ஏற்றி அனுப்பிவைக்காமல் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் புதிதாக கொண்டு வரும் நெல்லை கொள்முதல் செய்து இருப்பு வைக்க இடம் இல்லாமல் கொள்முதல் செய்வது நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக கூறி, அப்பகுதி விவசாயிகள் சாமிநாதன் தலைமையில் 20-க்கும் மேற்பட்டவா்கள், அரசு நெல் கொள்முதல் நிலையம் அருகே, மன்னாா்குடி- தஞ்சை பிரதான சாலையில், நெல்லை கொட்டி தாமதமின்றி விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும், அரசு நிா்ணயித்தபடி நாள்தோறும் ஆயிரம் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து, அங்கு வந்த வடுவூா் போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, மறியல் விலக்கிக்கொள்ளப்பட்டன. இதனால், அவ்வழித்தடத்தில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.