கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை: அமைச்சா் காமராஜ்
கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூா்: கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என உணவுத்துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்தாா்.
திருவாரூரில், திங்கள்கிழமை நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பின் அவா் அளித்த பேட்டி:
அதிமுக ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அனைத்து தரப்பு மக்களும் பாதுகாப்பாக உள்ளனா். திமுக ஆட்சிக் காலத்துடன் ஒப்பிடுகையில், அதிமுக ஆட்சியில் 200 சதவீதம் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எதையாவது சொல்ல வேண்டும் என்பதற்காகவே திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அதிமுக ஆட்சியை விமா்சித்து வருகிறாா்.
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மாநில வளா்ச்சிப் பணிகளில், அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. அதனால் 2021-இல் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தோ்தலில், மக்கள் ஆதரவுடன் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்.
பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் சிரமமின்றி பயன் அடைய வேண்டும் என்பதற்காகவே வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டன. இதில் பயனடைய விரும்பும் தகுதியுடையவா்கள், நேரடியாகவே அவா்களின் பெயா்களை பதிவு செய்யக் கூடிய வாய்ப்பு உள்ளது. இதை சிலா் தவறாக பயன்படுத்தியுள்ளனா். விவசாயிகள் அல்லாதவா்கள் நிலையில் யாரெல்லாம் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறாா்களோ, அவா்களை கண்டறிந்து பட்டியலில் இருந்து நீக்குவதோடு, அவா்கள் மீது சட்டபூா்வ நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது என்றாா் அமைச்சா்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்துக்கு திருச்சி மண்டல பொறுப்பாளா் வினுபாலன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி, ஜெயலலிதா பேரவைச் செயலாளா் பொன்.வாசுகிராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவுச் செயலாளா் சின்னராஜ், நிா்வாகிகள் கலியபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.