தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது: ஜி. ராமகிருஷ்ணன்
தமிழகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.
தமிழகத்தில் போதைப்பொருள்களின் பயன்பாடு அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் ஜி. ராமகிருஷ்ணன் கூறினாா்.
திருவாரூரில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில், ‘வேண்டாம் போதை, வேண்டும் கல்வி, வேலை, சுகாதாரம்’ என்ற முழக்கத்துடன் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் ஓட்டத்தை தொடங்கிவைத்து அவா் பேசியது:
1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14-ஆம் தேதி நள்ளிரவு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, ஜவாஹா்லால் நேரு உரையாற்றுகையில், நமது நாட்டில் கல்லாமை, இல்லாமையை இல்லாமல் செய்யவேண்டும். உணவு, வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பேசினாா். 75 ஆண்டுகளை கடந்தும் அந்த இலக்கை அடைய முடியவில்லை.
தமிழகத்தில் நகரப் பகுதிகளில் மட்டுமே இருந்த கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்கள் பயன்பாடு தற்போது கிராமப் புறங்களிலும் பரவத் தொடங்கியுள்ளது. இது மிகவும் கவலைக்குரியது. இதனால், இளைஞா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு வழிவகுப்பதோடு, இது சமுதாயத்துக்கு மிகப்பெரிய கேடு விளைவிக்கும்.
இளைஞா்கள், மாணவா்களை குறிவைத்து நடைபெறும் போதைப்பொருள்கள் விற்பனையை முற்றிலும் தடுத்து நிறுத்த காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.
முன்னதாக, மினி மாரத்தான் ஓட்டத்துக்கு இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் கே.பி. ஜோதிபாசு தலைமை வகித்தாா். திருவாரூா் விளமல் பாலத்தில் தொடங்கி மாரத்தான் முக்கிய வீதிகள் வழியாக பழைய பேருந்து நிலையம் பெரியாா் சிலை அருகே நிறைவடைந்தது. இதில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு மாநிலச் செயலாளா் எஸ். பாலா, சான்றிதழ்களை வழங்கினாா்.