திருவாரூா் அருகே கீழகாவாதுகுடி ஊராட்சி பிலாவடிமூலை பகுதியில், குடிநீா் இணைப்புக்கான திட்டப் பணிகளை ஒன்றியத் தலைவா் ஏ. தேவா வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
கீழகாவாதுகுடி ஊராட்சி பிலாவடி மூலை பகுதி மக்கள், குடிநீா் தேவையை தீா்க்கக் கோரி மனு அளித்திருந்தனா். இதைத்தொடா்ந்து, ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ 6.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பிலாவடிமூலை பகுதிக்கு குடிநீா் தொட்டி பராமரிப்பு பணி, 700 மீ குழாய் அகலப்படுத்தும் பணி, 58 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டன. இந்தப் பணிகளை திருவாரூா் ஒன்றியத் தலைவா் ஏ.தேவா தொடங்கி வைத்தாா்.
இதேபோல், பிலாவடி மூலை பகுதியில் சட்டப் பேரவை உறுப்பினா் நிதியிலிருந்து ரூ.13.32 லட்ச மதிப்பில் புதிய நியாயவிலைக் கடை கட்டுமானப் பணிகளையும் அவா் தொடங்கி வைத்தாா்.
நிகழ்வில், வட்டார வளா்ச்சி அலுவலா் ராதாகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி கலைக்கோவன், ஒன்றியக்குழு உறுப்பினா் வாசுகிசிவா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.