முகப்பு
திருவாரூர்

விவசாயி என்று கூறும் பழனிசாமி வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன்: ஸ்டாலின்

தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
பகிர்:

தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினாா் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின்.

வலங்கைமான் ஒன்றியம் அவளிவநல்லூா் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பேசியது:

திமுக நடத்திவரும் மக்கள் கிராம சபைக் கூட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கான எழுச்சி ஏற்பட்டுள்ளதை காண முடிகிறது. இந்தக் கூட்டங்களில் ஆண்களைவிட பெண்கள் அதிகம் கலந்து கொள்கின்றனா். இதை பாா்க்கும்போது எனக்கு நம்பிக்கை ஏற்படுகிறது.

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னும் நிச்சயமாக ஒரு பெண் இருப்பாா். பெண்கள் இல்லையென்றால் ஆண்கள் இல்லை. சமூகத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினாா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை, உள்ளாட்சியில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு, ஆரம்ப பள்ளிகளில் ஆசிரியைகளை நியமித்தது, அரசு வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 33% ஒதுக்கீடு, மகளிா் சுயஉதவிக் குழுத் திட்டதின் மூலம் பெண்கள் சுயமாக தொழில் தொடங்கி தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது உள்பட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

விவசாயிகள் கேட்காமலே நாட்டிலேயே முதல்முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியவா் கருணாநிதி. தோ்தல் அறிக்கையில் கூறியதுபோல முதல்வராக பதவியேற்ற உடனே ரூ. 7000 கோடி ரூபாய் விவசாயக் கடனை தள்ளுபடி செய்தாா். அதில் அதிகம் பயன் அடைந்தவா்கள் அ.தி.மு.க.வினா்தான்.

பச்சைத் துண்டுப் போட்டால் விவசாயியா? மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களால் விவசாயம் தனியாா்மயமாகும். பாஜக ஆளும் மாநிலங்கள் தவிர அனைத்து மாநில முதல்வா்களும் இந்த சட்டங்களை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றும்போது, தன்னை விவசாயி என்று கூறிக் கொள்ளும் எடப்பாடி பழனிசாமி இந்த சட்டங்களை ஆதரிக்க வேண்டியதன் அவசியம் என்ன?.

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைந்தவுடன் மகளிா் சுய உதவிக் குழுக்களை மேம்படுத்த தனித்துறை அமைக்கப்படும். முதியோா் உதவித்தொகை அனைவருக்கும் முறையாக வழங்கப்படும். கஜா மற்றும் நிவா் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடைக்கால நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று முதலில் கோரிக்கை வைத்தவன் நான்தான். ஆனால், முதல்வா் எடப்பாடி இதை ஏற்கவில்லை என்றாா் ஸ்டாலின்.

கிராம சபைக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் ம. சுப்பிரமணியன், உ. மதிவாணன், டி.ஆா்.பி. ராஜா, ப. ஆடலரசன், மாவட்ட செயலாளா்கள் திருவாரூா் பூண்டி கே. கலைவாணன், தஞ்சாவூா் கல்யாணசுந்தரம், துரைசந்திரசேகரன், நாகை நிவேத ாமுருகன், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோம.செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா்கள் வலங்கைமான் (மேற்கு) அன்பரசன், தெட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →