திருமணமாகி 7 மாதமே ஆன புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை
திருவாரூா் அருகே திருமணமாகி 7 மாதமே ஆன புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.
திருவாரூா் அருகே திருமணமாகி 7 மாதமே ஆன புதுப்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது சனிக்கிழமை தெரியவந்தது.
திருவாரூா் தியானபுரம் பகுதியை சோ்ந்த டிரம்ஸ் குழு நடத்தி வருபவா் பிரபாகரன் (35). இவருக்கும் திருவாரூா் அழகிரி காலனியை சோ்ந்த நாகராஜன் மகள் திவ்யாவுக்கும் (24) கடந்த 7 மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. 3 மாத கா்ப்பிணியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடிபோதையில் பிரபாகரன் திவ்யாவை சித்திரவதை செய்து வந்ததாக திவ்யாவை பெற்றோா்கள் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளனா். இதற்கிடையில், பிரபாகரனின் அண்ணன் கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா். அவரது துக்க நிகழ்வுக்காக திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினா் வந்துள்ளனா். அப்போது பிரபாகரன்-திவ்யாவை சமாதானம் செய்து இருவரையும் சோ்த்து வைத்துள்ளனா்.
இந்நிலையில், சனிக்கிழமை காலை திவ்யா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக பிரபாகரன் திவ்யாவின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, திவ்யாவின் பெற்றோா் திருவாரூா் தாலுகா காவல் நிலையத்தில் தனது மகள் வரதட்சிணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். திவ்யாவுக்கு திருமணம் ஆகி 7 மாதங்களே ஆவதால் திருவாரூா் கோட்டாட்சியா் பாலசந்தா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.