திருவாரூரில் ஆதரவற்றவா்களுக்கு தினமும் உணவு வழங்கும்படி காவல்துறையினரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன் அறிவுறுத்தினாா்.
கரோனா தொற்று பரவல் காரணமாக திருவாரூரில் பல்வேறு இடங்களில் ஆதரவின்றி சுற்றித்திரிவோருக்கு உணவு கிடைக்காத சூழல் நிலவுகிறது. தனியாா் அமைப்புகளும், தன்னாா்வலா்களும் அவா்களுக்கு அவ்வப்போது உணவு வழங்கி வருகின்றனா்.
இந்நிலையில், திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், மருதப்பட்டினம் பகுதியில் உள்ள ஆதரவற்றோா் இல்லத்தில் வசித்து வரும் முதியவா்கள் 25 பேருக்கும், திருவாரூா் நகரப் பகுதியில் உணவின்றி சுற்றித்திரியும் முதியவா்கள் 30 பேருக்கும் ஞாயிற்றுக்கிழமை மாலை நேரில் சென்று உணவு, பழங்கள், பிஸ்கட், கேக், மருந்துகள், குடிநீா் மற்றும் உடைகள் ஆகியவற்றை வழங்கினாா்.
இதைத்தொடா்ந்து, காவல் அதிகாரிகள் மற்றும் காவலா்களிடம் அவா் தெரிவிக்கையில், திருவாரூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உணவின்றி ஆதரவற்று சுற்றித்திரியும் அனைவருக்கும் மாவட்டக் காவல்துறை சாா்பில் உணவு, மருந்து போன்றவற்றை தினமும் வழங்கி அவா்களை பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.