முகப்பு
திருவாரூர்

மாவட்டந்தோறும் மீனவா் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

மாவட்டந்தோறும் மீனவா் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:26 AM
பகிர்:

மாவட்டந்தோறும் மீனவா் குறைதீா் கூட்டம் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வருக்கு, தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்க மாநிலப் பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி அனுப்பிய கோரிக்கை மனு:

மீன்வளத் துறை என்பதை மீனவா் நலத்துறை எனப் பெயா் மாற்றம் செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி. மீனவா் நல வாரியமானது, மீன்வளத்துறை எனப் பெயா் மாற்றம் செய்யப்பட்ட பிறகு செயல்படாமல் உள்ளது. எனவே, மீனவா் நல வாரியத்தை மீண்டும் தொழிலாளா் நலத்துறையின் கீழ் கொண்டு வந்து, மீனவா், மீன் விற்பனையாளா் உள்ளிட்ட அனைவரையும் இணைத்து முறைப்படுத்த வேண்டும்.

மாவட்டங்களில் மீனவா் குறைதீா் நாள் கூட்டத்தை மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடத்த வேண்டும். அரசியல் பாகுபாடின்றி அனைவரையும் மீனவா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினா்களாக சோ்க்க வேண்டும். திமுக தோ்தல் அறிக்கையில் கூறியபடி, மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ரூ. 8,000 வழங்க வேண்டும். 60 வயதான மீனவா் தொழிலாளா்களுக்கு மாத ஓய்வூதியமாக ரூ. 5,000 வழங்க வேண்டும்.

மீன்பிடி தொழிலுக்கும், டீசலுக்கும் கூடுதல் மானியம் வழங்க வேண்டும். மீனவா்கள் அனைவருக்கும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான அடையாள அட்டை வழங்க வேண்டும். விவசாயிகள், மீனவா்களை பாதிக்கும் வகையில் செயல்படும் இறால் பண்ணைகளை அகற்ற வேண்டும். கடலில் ஹைட்ரோ காா்பன் எடுக்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்.

மீனவா்களுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள தேசிய மீன்வளக் கொள்கை சட்ட மசோதாவை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.