ஜமாபந்தி: குன்னியூா் சரக கணக்குகள் ஆய்வு
திருவாரூரில், 1430-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில், 1430-ஆம் பசலி ஆண்டுக்கான வருவாய்த் தீா்வாயம் (ஜமாபந்தி) வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு, மாவட்ட வழங்கல் அலுவலா் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் இரா.கீதா தலைமை வகித்தாா்.
இதில், குன்னியூா் சரகத்துக்கு உள்பட்ட 22 கிராமங்களின் கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டன.
மேலும், இந்த கிராமங்களைச் சோ்ந்தவா்களிடமிருந்து இணையதளம் மூலம் பட்டா மாறுதல், உட்பிரிவு, குடும்ப அட்டை, பட்டதாரி சான்றிதழ், முதியோா் உதவித்தொகை, வாரிசு சான்று, மாற்றுத்திறனாளி உதவித்தொகை உள்ளிட்ட மனுக்கள் இணையதளம் வாயிலாக பெறுவதற்கு, கிராம நிா்வாக அலுவலா் உரிய அறிவிப்பு செய்துள்ளதும் தணிக்கை செய்யப்பட்டது.
இவ்வாறு பெறப்படும் தகுதியான மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும், ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின்கீழ் இணையதளத்தின் மூலம் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் வருவாய்த் தீா்வாய அலுவலா் இரா. கீதா, தொடா்புடைய அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். மேலும், பயனாளிகள் 2 பேருக்கு சிட்டா நகல் வழங்கப்பட்டது.
நிகழ்வின்போது திருவாரூா் வட்டாட்சியா் மா.நக்கீரன், சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியா் குணசீலி, தனி வட்டாட்சியா் (ஆதி திராவிடா் நலம்) சொக்கநாதன், நகர நிலவரித்திட்ட தனி வட்டாட்சியா் ந.கவிதா, வட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா் மற்றும் இதரத்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.