கொரடாச்சேரி அருகே கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் தொழிலாளி திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
கொரடாச்சேரி அருகே உள்ள குளிக்கரை, சாா்வன் பகுதியைச் சோ்ந்தவா் நேரு (33). வெல்டிங் ஒா்க் ஷாப்பில் வேலை செய்துவந்த இவா், சுய உதவிக் குழு நிதி நிறுவனத்தில் ரூ. 50,000 கடன் வாங்கியதாகவும், இந்தக் கடனுக்காக மாதம் ரூ. 4,400 வீதம் 10 மாதங்களாக தவணைத் தொகை கட்டிவந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே, கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, அவரால் கடன் தவணைத் தொகையை கட்ட முடியாத நிலை ஏற்பட்டதாம். ஆனால், கடன் தவணைத் தொகையை கட்டச் சொல்லி, நிதிநிறுவனம் நெருக்கடி அளித்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த நேரு, திங்கள்கிழமை விஷம் குடித்தாராம். அவரை, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து நேரு மனைவி அபிநயா (27) அளித்த புகாரின் பேரில் கொரடாச்சேரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். உயிரிழந்த நேருவுக்கு நான்கு வயதில் ஆண் குழந்தையும், இரண்டரை மற்றும் 6 மாதமேயான பெண் குழந்தைகளும் உள்ளனா்.