மின்வாரியத்தில் பகுதிநேர மின் ஊழியா்களை நிரந்தரப்படுத்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் தமிழ்நாடு மின்ஊழியா் மத்திய அமைப்பின் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு அதன் கோட்டத் தலைவா் கே. முரளிதரன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலாளா் டி. முருகையன், கூட்டத்தை தொடக்கி வைத்துப் பேசினாா்.
மாநில துணைத் தலைவா் எஸ். ராஜாராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். இதில், சிஐடியூ மாவட்டத் தலைவா் இரா. மாலதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
கூட்டத்தில், மின் மசோதாவை (2021) ரத்து செய்ய வேண்டும். மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு தினக்கூலியாக ரூ. 380 வழங்க வேண்டும். கேங்மேன் பணியாளா்களை சொந்த மாவட்டத்தில் பணியமா்த்த வேண்டும். பகுதிநேர பணியாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.