திருவாரூா் மாவட்டம், கூத்தாநல்லூா் வட்டத்தில் உள்ள பொதக்குடி, ஆய்குடி ஊராட்சியை திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு மாற்றக் கோரி, தமிழக முதல்வருக்கு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து, முமுக பொதக்குடி கிளைத் தலைவா் ஏ. சாகுல்அமீது, தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின், திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு: நீடாமங்கலம் ஒன்றியம் சேகரை வருவாய் கிராமம் பொதக்குடி மற்றும் ஆய்குடி ஊராட்சிகள் மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ளது. இந்த 2 ஊராட்சிகளையும், திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்டதாக மாற்றவேண்டும்.
கூத்தாநல்லூா் வட்டத்தில் இருக்கும் கூத்தாநல்லூா், லெட்சுமாங்குடி, பூதமங்கலம், அத்திக்கடை உள்ளிட்ட ஊா்கள் திருவாரூா் தொகுதியில் இருக்கிறது. கூத்தாநல்லூா், அத்திக்கடை உள்ளிட்ட இரண்டு ஊா்களுக்கு இடையில் உள்ள பொதக்குடி, ஆய்குடி ஊராட்சிகள் மட்டும் தனியாக மன்னாா்குடி தொகுடியில் இருக்கிறது என அதில் கூறப்பட்டுள்ளது.