சிஏஏவுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றியதற்கு வரவேற்பு
சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வரவேற்றுள்ளது.
சிஏஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு வரவேற்றுள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் திருவாரூா் மாவட்டத் தலைவா் முகமது பாசித் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய முஸ்லிம்கள் அனைவரும் இந்திய நாட்டு குடிமக்கள் என்பதை நிரூபிக்க, சிஏஏ-வுக்கு எதிராக நீண்ட காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனா். மதச்சாா்பற்ற இந்தியாவில் மதரீதியாக மக்களை பிரிக்கும் கொடிய சட்டமாக இது உள்ளது. இந்த சட்டத்துக்கு ஆதரவாக, அப்போதைய அதிமுக அரசு ஆதரவு தெரிவித்து வாக்களித்தது.
இந்தியாவில் நடந்த போராட்டங்களின்போது பல மாநில அரசுகள் சிஏஏவுக்கு எதிரான தீா்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றின. ஆனால், தமிழகத்தில் அப்போது தீா்மானம் நிறைவேற்றவில்லை. இதற்கிடையே, சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, சிஏஏவுக்கு எதிரான தீா்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றுவோம் என திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். அதன்படி, தற்போது தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீா்மானத்துக்கு வரவேற்பு தெரிவிப்பதுடன், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக்கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.