முகப்பு
திருவாரூர்

பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் 1,008 திருவிளக்கு பூஜை

தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம்  அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை  ஆடிகடைசி செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெற்றது.

Updated On : 17 ஆகஸ்ட், 2022 at 10:08 AM
பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் நடந்த திருவிளக்கு பூஜை.
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:35 PM

.நீடாமங்கலம்: தேவாரப்பாடல் பெற்ற நீடாமங்கலம்  அருகேயுள்ள பூவனூர் சதுரங்கவல்லபநாதர் கோயிலில் 20-ஆம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை  ஆடிகடைசி செவ்வாய்க்கிழமை  இரவு நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் அருகேயுள்ளது பூவனூர் கிராமம். இங்கு கற்பகவல்லி, ராஜராஜேஸ்வரி சமேத சதுரங்கவல்லபநாதர் கோயில் உள்ளது. திருநாவுக்கரசரால் தேவாரம் பாடல்பெற்ற சிறப்புடையது.

கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தாற்போல் சாமுண்டீஸ்வரி அம்மன் இக்கோயிலில் தான் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் என்ற சிறப்பும் இக்கோயிலுக்கு உண்டு. ஞாயிற்றுக்கிழமைகளில் சாமுண்டீஸ்வரி அம்மன் சன்னதியில் எலிக்கடி உள்ளிட்ட விஷக்கடிகளுக்காக வேர் கட்டும் பழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது.

Advertisement

சித்தர்வேடம் பூண்டு சிவபெருமான் ராஜராஜேஸ்வரியுடன் சதுரங்கம் விளையாடி அதில் வெற்றி பெற்று ராஜராஜேஸ்வரியை திருமணம் செய்து கொண்ட வரலாற்றுச் சிறப்பும் இத்தலத்திற்கு உண்டு.

சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் ஆடி கடைசி செவ்வாய்க்கிழமையன்று இரவு 20ஆம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை அதிவிமரிசையாக  நடைபெற்றது.

இதனைமுன்னிட்டு சாமுண்டீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சாமுண்டீஸ்வரி அம்மன்

சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மஞ்சள்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர்.சிவாச்சாரியார்கள் தமிழில் போற்றி அர்ச்சனை மந்திரங்களைச்  சொல்ல திருவிளக்கு பூஜையை பெண்கள் செய்தனர்.

தொடர்ந்து சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

மஞ்சள்காப்பு அலங்காரத்தில் பூவனூர் சாமுண்டீஸ்வரி அம்மன்

இதற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் எஸ்.மாதவன், கோயில் செயல் அலுவலர் பி.பிரபாகரன்  மற்றும் பிரதோஷகமிட்டியினர், திருவிளக்கு பூஜை உபயதாரர்கள் செய்திருந்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை நீடாமங்கலம்  காவல் ஆய்வாளர் ராஜேஷ்கண்ணன் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.