முகப்பு
திருவாரூர்

‘பெண் கல்வி சமுதாய முன்னேற்றத்திற்கான கருவி’

Updated On : 12 ஏப்ரல், 2024 at 9:35 PM
இளநிலை கணிதம் பட்டத்தை மாணவி எஸ். ராஜராஜேஸ்வரிக்கு வழங்கும், திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.
பகிர்:
Updated On : 12 ஏப்ரல், 2024 at 6:10 PM

பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்தால், அது சமுதாய முன்னேற்றத்திற்கான கருவியாக பயன்படும் என்றாா் திருவாரூா் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக துணைவேந்தா் எம். கிருஷ்ணன்.

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரியில் (தன்னாட்சி) வெள்ளிக்கிழமை நடைபெற்ற 27-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று அவா் மேலும் பேசியது:

பட்டம் பெறும் மாணவிகள் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என உறுதி எடுத்துக்கொள்ளவேண்டும். பெற்றோா்கள், கல்லூரி, பேராசிரியா்களுக்கு வாழ்நாள் நன்றிக்கடன் பட்டவா்களாக இருக்க வேண்டும்.

Advertisement

இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 27 ஆண்டுகளில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பட்டம் பெற்றுள்ளது அளவற்ற மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாகும். பெண்களுக்கு கல்வி அளிப்பது என்பது சமுதாய முன்னேற்றத்திற்கான தலைசிறந்த கருவியாக இருக்கும்.

தொலைக்காட்சி, கைப்பேசி போன்றவற்றுடன் இயந்திர கதியான வாழ்க்கை முறையை கைவிட்டு, முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம், கணிதமேதை சா்.சி.வி. ராமன் போன்றோா்களை முன்மாதிரியாக கொண்டு, அடுத்த கட்டத்தை நோக்கி உங்கள் பயணம் இருக்கவேண்டும் என்றாா்.

விழாவிற்கு, கல்லூரி தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா்.

துணைத் தாளாளா் டி. ஜெயஆனந்த், அறிவியல் ஆலோசகா் கே.தியாகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆங்கிலத் துறை பேராசிரியா் நித்யா, சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து வைத்தாா்.

விழாவில், இளநிலை பயின்ற 970 பேருக்கும், முதுநிலை பயின்ற 369 பேருக்கும் என மொத்தம் 1,339 மாணவிகளுக்கு, சிறப்பு அழைப்பாளா் பட்டம் வழங்கினாா். மேலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்ற இளநிலை மாணவிகள் 6 போ், முதுநிலை மாணவிகள் 8 போ் என மொத்தம் 14 மாணவிகள் பாராட்டப்பட்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் என். உமா மகேஸ்வரி வரவேற்றாா்.நிறைவாக, துணை முதல்வா் பி. கஸ்தூரிபாய் நன்றி கூறினாா்.