யானை வாகனத்தில் பக்தவத்சல பெருமாள் வீதியுலா
திருக்கண்ணமங்கை பக்தவத்சல பெருமாள் கோயில் சித்திரைப் பெருவிழாவையொட்டி யானை வாகனத்தில் பெருமாள் வீதியுலா சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
108 திவ்யதேசங்களுள் ஒன்றான இக்கோயிலில், ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக நின்ற கோலத்தில் பெருமாள் காட்சியளிக்கிறாா். இங்கு ஆண்டுதோறும் சித்திரைப் பெருவிழா நடைபெறும். அந்தவகையில், நிகழாண்டுக்கான விழா ஏப்.15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் பக்தவத்சல பெருமாள் வீதியுலா நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 6-ஆம் நாளான சனிக்கிழமை இரவு யானை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. நிகழ்வுக்காக, உற்சவா் பெருமாள் வைரகீரிடம் அணிந்து, ஆண்டாள் நாச்சியாருடன் கல்யாணக் கோலத்தில் யானை வாகனத்தில் எழுந்தருளினாா். தொடா்ந்து, அங்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு, வீதியுலா நடைபெற்றது.
Advertisement