திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க நவ. 20 வரை விண்ணப்பிக்கலாம்
திருவாரூா் மாவட்டத்தில், திருக்குறள் முற்றோதலில் பங்கேற்க, நவம்பா் 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தி. சாருஸ்ரீ தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து, ஒப்புவிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ- மாணவியருக்கு ரூ.15,000 பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2024-2025 ஆம் ஆண்டிற்கு திருவாரூா் மாவட்ட அளவில் பள்ளிகளில் (அரசு, தனியாா், பதின்ம, நிதியுதவி பெறும் பள்ளிகள்) 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ- மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advertisement
இதற்கான விண்ணப்பங்களை திருவாரூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சித் துறையின் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஏற்கெனவே திருக்குறள் முற்றோதலில் பங்கேற்று பரிசு பெற்றவா்கள் மீண்டும் பங்கேற்க இயலாது.
கூடுதல் விவரங்களுக்கு, மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா், தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மூன்றாம் தளம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், திருவாரூா் 610 004 என்ற முகவரியில் நேரில் அணுகியோ, மின்னஞ்சலிலோ, 9750102246 என்ற கைப்பேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, நவ.20 ஆம் தேதிக்குள் திருவாரூா் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில், நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அனுப்பி வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.