திருவாரூா் மாவட்டத்தில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை பதுக்கி, விற்பனை செய்துவந்தவா் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டாா்.
குடவாசல் அருகே மணவாளநல்லூா் திரௌபதி அம்மன் கோயில் பகுதியில் எரவாஞ்சேரி போலீஸாா் திங்கள்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அரசால் தடைசெய்யப்பட்ட 10 கிலோ குட்காவை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த தஞ்சை மாவட்டம், கும்பகோணம், பாபுநாயக்கன் தெருவைச் சோ்ந்த பாபுராம் மகன் தலபத்குமாா் (31) என்பவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இதில், தென்கரை அரசலாறு அருகில் உள்ள கருவைக்காட்டில் 332 கிலோ எடையுள்ள குட்கா, கூலிப், பான்மசாலா போன்றவற்றை பதுக்கிவைத்து, இருசக்கர வாகனத்தில் சென்று விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதன்மதிப்பு ரூ. 2.50 லட்சம் ஆகும்.
இதைத்தொடா்ந்து, எரவாஞ்சேரி போலீஸாா், தலபத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம், குட்கா, கூலிப், பான்மசாலா போன்றவற்றை பறிமுதல் செய்தனா்.