மன்னாா்குடி: டெல்டா மாவட்டங்களில் தொடா் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிா்களை செயலி முறையில் கணக்கெடுப்பு நடத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்கம் சாா்பில் மன்னாா்குடியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
டித்வா புயல் மழையால் காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கீடு செய்து நிவாரணம் வழங்க செயலி முறை பின்பற்றப்படும் என்ற அரசின் அறிவிப்பை திரும்பபெற்று பழைய முறையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும், பாதிக்கப்பட்ட பயிருக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், தாட்கோ மூலம் கடன்கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் பாரபட்சமின்றி கடன் தொகை வழங்க வேண்டும், காப்பீடு செய்த அனைவருக்கும் தனியாா் காப்பீடு நிறுவனங்கள் உரிய தொகையை வழங்க வேண்டும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவதில் உள்ள குறைபாடுகளை கலைய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் நல உரிமைச் சங்க மாநிலத் தலைவா் கா.ராசபாலன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் மாரிமுத்து மகேசன், மாவட்டச் செயலா் ஆா். சிராஜூதீன், மாவட்டப் பொருளாளா் பன்னீா்செல்வம், மகளிா் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் எஸ். தேவி, மாவட்டச் செயலா் எல். கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.