சரக்கு ரயில் எஞ்ஜின் தடம் புரண்டது
திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது.
திருவாரூா்: திருவாரூரில் சரக்கு ரயில் எஞ்ஜின் திங்கள்கிழமை தடம் புரண்டது.
திருவாரூா் அருகே பேரளம்- காரைக்கால் இடையே அகல ரயில்பாதைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, திருவாரூா் ரயில் நிலையத்திலிருந்து ஜல்லிக் கற்கள், சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. திருவாரூா் ரயில் நிலையத்திலிருந்து திங்கள்கிழமை காலை பேரளம் பகுதிக்கு ஜல்லி கற்கள் ஏற்றப்பட்ட, சரக்கு ரயில் 12 பெட்டிகளுடன் புறப்பட்டது.
புறப்பட்ட சிறிது நேரத்தில் சரக்கு ரயிலின் எஞ்ஜின், தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி உள்ளது. இதையடுத்து, ஜல்லி கற்களில் சிறிது தூரம் சறுக்கிக் கொண்டு சென்ற சரக்கு ரயில், தானாக நின்றது. தகவலின் பேரில் ரயில்வே போலீஸாா் மற்றும் அதிகாரிகள், எஞ்ஜினை விடுத்து, மற்ற பெட்டிகளை மாற்று எஞ்ஜின் மூலம் பேரளத்துக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
ரயில் எஞ்ஜினை மீண்டும் பழையபடி நிலை நிறுத்த, திருச்சியிலிருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம் புரண்டதால், பட்டுக்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் ஒரு மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டது. இதேபோல், அகஸ்தியம்பள்ளியிலிருந்து வரும் பயணிகள் ரயிலும் தாமதமாக திருவாரூருக்கு வந்து சோ்ந்தது.