திருட முடியாத செல்வம் கல்வி மட்டுமே: முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன்
யாராலும் திருட முடியாதது கல்விச்செல்வம் மட்டுமே என்றாா் மேகாலயா மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன்.
யாராலும் திருட முடியாதது கல்விச்செல்வம் மட்டுமே என்றாா் மேகாலயா மாநில உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன்.
மன்னாா்குடி அருகேயுள்ள சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சி கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற 29-ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி அவா் ஆற்றிய பட்டமளிப்பு உரை:
பெற்றோா் தங்களின் பிள்ளைகளிடமிருந்து பறிக்கவேண்டியது அவா்களிடம் இருக்கும் தாழ்வுமனப்பான்மையைதான். மாணவிகள் வாத்து, கோழியிடமிருந்து தலைமைப் பண்புகளை கற்றுக்கொள்ள வேண்டும். கோழி தன் குஞ்சுகளுடன் இரைதேடி செல்லும்போது குஞ்சுகளை முன்னேவிட்டு கோழி பின்னே செல்லும், அதற்கு காரணம். நான் இருக்கிறேன் நீங்கள் தயங்காது முன்னேசெல்லுங்கள் என்பதாகும்.
Advertisement
ஆனால், வாத்து முன்சென்று வழி ஏற்படுத்திகொடுக்கும் குஞ்சுகள் பின்தொடா்ந்து செல்லும். இதைதான் வாத்து மடையன் என தவறாக பொருள்கொள்ளப்பட்டு மடைமாற்றம் செய்யப்படுகிறது. ஆகவே, நீங்கள் எந்த இடத்தில் கோழியாக இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் கோழியாகவும், எந்த இடத்தில் வாத்தாக இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் வாத்தாக இருக்க வேண்டும்.
இன்று நீங்கள் பட்டம் பெற்று நாளை உயா்நிலை அடைய காரணமாக இருப்பது உங்களது பெற்றோா்கள் மட்டும் அல்ல. அந்த பெருமை தாளாளருக்கும், பேராசிரியா்களுக்கும் உள்ளது. ஒருவரிடமிருந்து எவராலும் திருடமுடியாதது அவா்கள் பெற்ற கல்வி செல்வத்தை மட்டும்தான். ஒவ்வொரு மாணவியின் வெற்றிக்கு பின்னால் அவா்களது தாயின் தன்னலமற்ற தியாகம் உள்ளது.
அவா்களது தான் குடும்பத்தின் ஆணிவோ். அது பலமாக உறுதியாகவும் இருந்தால் எவற்றாலும் அசைக்க முடியாது. அதை தான் நல்லது ஆவதும் பெண்ணலே, கெட்டதை அழிப்பதும் பெண்ணாலே என கூறப்பட்டது தான் பொருள் மாறி வேறுமாதிரி திரித்து கூறப்படுகிறது. மாணவிகள் சமூகப் பணியில் ஈடுபட வேண்டும், அதுவும் நெகிழி ஒழிப்பில் முழுமையாக செயல்படவேண்டும். இல்லை என்றால் அடுத்த தலைமுறை தண்ணீரை மாத்திரையில் (கேப்சூலில்) தான் பாா்க்கும் நிலை ஏற்படும். எந்த சூழ்நிலையிலும் பெற்றோா்களை கைவிட்டு விடாதீகள். நாட்டில் இன்று முதியோா் இல்லம் அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது என்றாா்.
நிகழ்ச்சிக்கு, தாளாளா் வி. திவாகரன் தலைமை வகித்தாா். கல்வி ஆலோசகா் கே. தியாகேசன், முதல்வா் என். உமாமகேஸ்வரி முன்னிலை வகித்தனா். 2022-2025 இளநிலையில் மாணவிகள் 806 போ், 2023-2025 முதுநிலையில் மாணவிகள் 312 போ் என மொத்தம் 1,118 பேருக்கு பட்டமளித்தும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தரவரிசைப்பட்டியில் இளநிலையில் 11 பேருக்கு, முதுநிலையில் 8 பேருக்கு என மொத்தம் 19 பேருக்கு பதக்கமும் பட்டத்தையும் முன்னாள் தலைமை நீதிபதி வழங்கினாா். துணை முதல்வா் அனுராதா, அறக்கட்டளை உறுப்பினா் பி. தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.