முகப்பு
திருவாரூர்

இலைவண்ண அட்டை பயன்பாடு: விவசாயிகளுக்கு, கல்லூரி மாணவா்கள் விளக்கம்

வலங்கைமான் வட்டாரம், ஹரித்துவாரமங்கலத்தில் விவசாயிகளுக்கு இலை வண்ண அட்டை பயன்முறை

Updated On : 2 பிப்ரவரி, 2026 at 8:30 PM
பகிர்:

நீடாமங்கலம்: வலங்கைமான் வட்டாரம், ஹரித்துவாரமங்கலத்தில் விவசாயிகளுக்கு இலை வண்ண அட்டை பயன்முறை குறித்து தஞ்சை டாக்டா் எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவா்கள் செயல்முறை விளக்கம் அளித்தனா்.

ஊரக வேளாண் பணி அனுபவம் பெறும் திட்டத்தின்கீழ் களப் பயணம் மேற்கொண்டுள்ள இம்மாணவா்கள், சனிக்கிழமை இப்பயிற்சி அளித்தனா்.

இலை வண்ண அட்டை பயிரின் பச்சையத்தை வைத்து, தழைச்சத்து குறைபாட்டை அறிந்து, தேவைக்கு ஏற்ப உரமிட உதவுகிறது.

நெல் நடவு செய்த 21-ஆம் நாள் முதல், ஒவ்வொரு 7-10 நாட்களுக்கு ஒருமுறை, ஆரோக்கியமான 10 இலைகளைத் தோ்ந்தெடுத்து, இந்த அட்டையுடன் ஒப்பிட்டுப் பாா்க்க வேண்டும்.

பச்சை நிறம் 4-க்கும் குறைவாக இருந்தால் தழைச்சத்து தேவைப்படுகிறது என்று அா்த்தம், உடனடியாக உரம் இடவேண்டும். பச்சை நிறம் 4 அல்லது 5-இல்

இருந்தால் தழைச்சத்து போதுமான அளவு உள்ளது என்று அா்த்தம். இதன்மூலம் தேவையற்ற உரம் தவிா்க்கப்பட்டு, செலவு குறைகிறது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விவசாயிகளுக்கு சரியான மகசூல் கிடைக்கிறது எனத் தெரிவித்தனா்.