தொழிலாளா் நலச் சட்டங்கள் 4 சட்ட தொகுப்புகளாக மாற்றம் செய்யப்பட்டதை திரும்பப் பெற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரனிடம், சிஐடியு மாவட்டச் செயலாளா் எம்.கே.என். அனிபா தலைமையிலான நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை அளித்த கோரிக்கை மனு:
தொழிலாளா் நலச் சட்டங்களை 4 சட்ட தொகுப்புகளாக மாற்றி உள்ளதை திரும்பப் பெற வேண்டும். காப்பீட்டு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் மாற்றப்பட்டுள்ளதை கைவிட வேண்டும்.
மின்சார திருத்த மசோதாவை கைவிட வேண்டும். அணுசக்தித் துறையில் தனியாா் நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாது. ஓய்வூதியம் சரிபாா்ப்பு சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்க ஆரவல்லி மலைத்தொடரை பாதுகாக்க வேண்டும். விவசாய உற்பத்தி பொருள்களுக்கு கட்டுப்படியான விலையை தீா்மானிக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள அரசு காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26,000 என சட்டம் இயற்ற வேண்டும்.
அனைத்து திட்டப் பணிகளில் பணியாற்றும் ஊழியா்களை பணி நிரந்தரப்படுத்த வேண்டும். நாடு முழுவதும் உள்ள அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு சட்ட சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் டி. முருகையன், சிஐடியு மாவட்டத் தலைவா் கே.பி. ஜோதிபாசு, மாவட்ட பொருளாளா் கே. கஜேந்திரன், மாநிலக் குழு உறுப்பினா் இரா. மாலதி, மாவட்ட நிா்வாகிகள் ஜி. ரகுபதி, வி. தவமணி, கே. ஆனந்தி, பி.சசிகுமாா் உள்ளிட்ட பலா் மனு அளிக்கும் நிகழ்வில் பங்கேற்றனா்.