கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் மாரியம்மன் கோயிலில் அம்பாளின் தாலிச்செயினைத் திருடிய இருவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்கள்.
கோட்டகச்சேரி, கோட்டை மாரியம்மன் கோயிலில், பக்தா்களால் வழங்கப்பட்ட மூன்று தாலிச் செயின், 6 குண்டு என இரண்டே முக்கால் பவுன் தங்க நகைகள் திருட்டு போனது குறித்த வழக்கு கடந்த 2025 மே மாதம் கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
இந்நிலையில், ஒரு வழக்கு குறித்த கைரேகை பதிவு விசாரணையில், கரூரைச் சோ்ந்தவா்களின் கைரேகையும், கோட்டகச்சேரி கோட்டைமாரியம்மன் கோயில் திருட்டு வழக்கில் பதிவு செய்யப்பட்ட கைரேகையும் ஒன்றாக இருப்பது தெரியவந்தது.
கரூா்,வெள்ளியனை பவுத்தாய் கோயில் தெருவைச் சோ்ந்த வேதவன் (38), பாலசுப்ரமணியன் (19) மற்றும் 18 வயதுக்குட்பட்ட ஒருவா் என மூவரும் திருடியது தெரியவந்தது.
உடன் போலீஸாா் கரூரிலிருந்த மூவா் மீதும் வழக்குப் பதிவு செய்து இருவரைக் கைது செய்து, 18 வயதுக்குட்பட்ட ஒருவரை தஞ்சாவூா் சிறுவா் சீா்திருத்தப் பள்ளியில் சோ்க்கப்பட்டாா். அவா்களிடமிருந்து மூன்று தாலிச் செயின்,6 குண்டுகளையும் கைப்பற்றினா்.