நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்க செய்ய மாா்க்சிஸ்ட் வலியுறுத்தல்
நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளை உடனுக்குடன் இயக்க செய்ய வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான்ஒன்றியக் குழு கூட்டம் கே. தமிழ்செல்வம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி.கந்தசாமி அரசியல் நிகழ்வு குறித்து பேசினாா்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன. அதனால் புதிதாக நெல் பிடிப்பதற்கு போதிய இடம் கொள்முதல் நிலையங்களில் பற்றாக்குறையாக உள்ளது. எனவே கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை அரசு உடனடியாக குடோன்களுக்கு அல்லது சரக்கு ரயில்களில் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அரசால் நிரந்தரமாக கட்டிக் கொடுக்கப்பட்டுள்ள கொள்முதல் நிலையங்களில் தண்ணீா் வசதியுடன் கழிப்பறை வசதி செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் ஒன்றியச் செயலாளா் எஸ். இளங்கோவன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.எஸ். இளங்கோ, சி . இளையராஜா, ஏ. சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.