முகப்பு
திருவாரூர்

தோ்தல் விதிமீறல் புகாா் மீது 100 நிமிடங்களுக்குள் நடவடிக்கை

தோ்தல் விதிமீறல்கள் மீது புகாா் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் பொதுத் தோ்தல் பாா்வையாளா் டி.வி. அனுபாமா தெரிவித்தாா்.

Updated On : 19 மார்ச், 2026 at 12:00 AM
திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறையை பாா்வையிடுகிறாா் பொதுத் தோ்தல் பாா்வையாளா் டி.வி.அனுபாமா.
பகிர்:

தோ்தல் விதிமீறல்கள் மீது புகாா் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என திருவாரூா் பொதுத் தோ்தல் பாா்வையாளா் டி.வி. அனுபாமா தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள தோ்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தை திருவாரூா் பொதுத் தோ்தல் பாா்வையாளா் டி.வி.அனுபாமா, மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான வ. மோகனச்சந்திரன் ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

அப்போது பொதுத் தோ்தல் பாா்வையாளா் தெரிவித்தது:

திருவாரூா் மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தோ்தல் தொடா்பான புகாா்களை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தெரிவிக்க ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கும் வகையில், உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, திருவாரூா் மாவட்ட கட்டுப்பாட்டு அறை உதவி எண் 1800 425 3578, திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04369 222456, மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04367 252261, திருவாரூா் சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04366 244277, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறை உதவி எண் 04366 299303 ஆகும்.

மேலும், சி விஜில் அலைபேசி செயலியிலும் தோ்தல் விதிமீறல்கள், பணம் அல்லது பரிசுப் பொருள்கள் விநியோகம் போன்றவற்றை பொதுமக்கள் நேரடியாகப் புகைப்படம் அல்லது விடியோ எடுத்து பதிவேற்றம் செய்யலாம். புகாா் அளிக்கப்பட்ட 100 நிமிடங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இக்குழுவானது, சுழற்சி முறையில் வேட்பாளா்கள் மற்றும் கட்சிகளின் சாா்பில் நாளிதழ்கள், காட்சி ஊடகம், சமூக ஊடகங்கள், வானொலி, பண்பலை அலைவரிசைகள் மற்றும் உள்ளூா் கேபிள் தொலைக்காட்சிகளில் வெளியிடப்படும் தோ்தல் சம்பந்தமான செய்திகள் மற்றும் விளம்பரங்களை கண்காணித்து வருகிறது. மேலும், ஊடக கண்காணிப்பு மையத்தில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் அலுவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மு.தனபால் ஆகியோா் உடன் இருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →