புது தில்லி தேசிய உயிரியல் பூங்காவில் கண்களுக்கு விருந்தளிக்கும் வன விலங்குகள்!
புது தில்லி, ஜூலை 23: வன விலங்குகளின் உலகம் தனித்துவம் மிக்க ஒன்று. வெளியூர் சுற்றுலாப் பயணிகளும், தில்லி மாநகர உள்ளூர் வாசிகளும் கூடிக் களிக்கும் பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுச்சூழல் தகவல்களை அறிந்த
புது தில்லி, ஜூலை 23: வன விலங்குகளின் உலகம் தனித்துவம் மிக்க ஒன்று. வெளியூர் சுற்றுலாப் பயணிகளும், தில்லி மாநகர உள்ளூர் வாசிகளும் கூடிக் களிக்கும் பொழுதுபோக்கு இடமாகவும், சுற்றுச்சூழல் தகவல்களை அறிந்துகொள்ளும் வனமாகவும் உள்ளது இப்பூங்கா.
புது தில்லியின் பழமையான புரானா கிலா கோட்டையை ஒட்டி அமைந்துள்ளது இப் பூங்கா. 1950-ம் ஆண்டு பூங்காவுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று, 1955-ம் ஆண்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைக்கப்பட்டது.
பூங்கா திறப்பதில் மிகவும் ஆர்வம் காட்டியவர் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. இப்பூங்கா இப்போது 50-ம் ஆண்டு பொன்விழாவைக் கடந்துள்ளது.
அரிதான பறவை, விலங்கினங்கள்: 280 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள இப்பூங்காவில் அரிதான 123 வகையான பறவைகளும், விலங்குகளும் உள்ளன. உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு உயிரினங்களும் பூங்காவாசிகளாக உள்ளன.
சாம்பல் நிறக் கிளி, நீல மஞ்சள் கிளி, பல வண்ணத்துடன் கூடிய பெரிய வகை கிளி, காந்தக் கொண்டை வண்ணக் கிளி, தங்க- வெள்ளி நிறக் கோழிகள், செந்நிறக் காட்டுக் கோழி, அரிதான மயில் வகைகள், பெரிய பச்சை வண்ணக் கிளி, வல்லூறு, வெள்ளை நிறக் கழுகு ஆகியவை உள்ளன.
அழியும் நிலையில் உள்ள அரிதான விலங்குகளும் இப்பூங்காவில் காணப்படுகின்றன. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் மணிப்பூரில் மான்கள் உள்ளன. அதற்கு அடுத்து, இப்பூங்காவில் இவை அதிகம் உள்ளன.
காண்டாமிருகம், வெள்ளைப் புலி, மனிதக் குரங்கு, வடகிழக்கு இந்தியாவில் மட்டுமே உள்ள ஹூலா ஹிப்பான் எனும் குரங்கு, அரியவகை ஆப்பிரிக்க யானை, மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் சிங்கவால் குரங்கு, 11 வகை மான்கள், ஒட்டகச்சிவிங்கி, ஆப்பிரிக்க வகை எருமை, இந்தியக் காட்டெருமை ஆகியவையும், பன்னிரண்டு விதமான பாம்புகள், நட்சத்திர ஆமை, சாதாரண ஆமை, உடும்பு, முதலை ஆகியவையும் உள்ளன. ஆசிய வகை சிங்கங்கள், வங்கப் புலிகள் உலவிடுவதற்கான தனி இடங்களும் உள்ளன.
நடந்து சென்றால் 4 மணி நேரமும், பேட்டரி கார் என்றால் ஒரு மணி நேரமும் என சுற்றிப் பார்க்கும் வகையில் பூங்காவில் உயிரினங்களின் வாழிடங்கள் பல இடங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ளன.
பூங்காவைச் சுற்றிப்பார்க்க நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ. 20-ம், 5- 12 வயதுடைய சிறுவர்களுக்கு ரூ.10-ம் உள்ளன. 5 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள் இலவசமாகவும் அனுமதிக்கப்படுகின்றனர். மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு கட்டணம் ஏதுமில்லை. பள்ளிக் குழந்தைகளுக்கு சலுகைக் கட்டணம் உண்டு.
ஏப்ரல் 1-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை காலை 9 மணி முதல் 4.30 மணி வரையும், அக்டோபர் 16 முதல் மார்ச் 31-ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் பூங்கா திறக்கப்படுகிறது.
""தேசிய அளவில் உயிரியல் பூங்காக்களில் இறக்கும் விலங்குகளின் எண்ணிக்கை 5 சதவீதமாக உள்ளது. ஆனால், இப்பூங்காவில் 2 சதவீதம் மட்டுமே உள்ளது. அதேசமயம், பிறப்பு விகிதம் 10 சதவீதமாக அதிகரித்துள்ளது'' என்று பூங்காவின் வன விலங்கு மூத்த மருத்துவ அலுவலர் டாக்டர் என். பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
உயிரியல் பூங்காவின் இயக்குநராக அமிதாப் அக்னிஹோத்ரி உள்ளார். சுமார் 250 பணியாளர்கள் மருத்துவப் பிரிவு, கல்விப் பிரிவு, சுகாதாரப் பிரிவு உள்பட 6 பிரிவுகளில் பணியாற்றுகின்றனர் என்றுஅவர் மேலும் தெரிவித்தார்.