கார் வாங்கிப் பார்... அதை நிறுத்த இடம் தேடிப் பார்..!
கல்யாணம் செய்து பார்; வீட்டைக் கட்டிப் பார்' என்பது தமிழர்களின் வழக்கத்தில் உள்ள ஒரு சொலவடை. தில்லியில் கார், பஸ் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களிடம் கேட்டால், "வாகனம் நிறுத்த இடம் தேடிப் பார்; பார்
கல்யாணம் செய்து பார்; வீட்டைக் கட்டிப் பார்' என்பது தமிழர்களின் வழக்கத்தில் உள்ள ஒரு சொலவடை.
தில்லியில் கார், பஸ் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களிடம் கேட்டால், "வாகனம் நிறுத்த இடம் தேடிப் பார்; பார்க்கிங் கட்டணம் கட்டிப் பார்' என்றுதான் சொல்வார்கள்! அத்தகைய மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது "பார்க்கிங்' பிரச்னை.
தில்லி போன்ற பெருநகரங்களில் வாகனப் பயன்பாடு ஆடம்பரப் பொருளாகப் பார்க்கப்படாமல் அவசிய உடைமையாகி வருகிறது.
குறித்த நேரத்தில், குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதற்கு அரசு பஸ்ûஸ நம்பியிருப்பது நடுத்தர மக்களுக்கேகூட மனச்சோர்வு தருவதற்கு காரணம், விரைவாக செல்ல முடியாததுதான். அதனால், அவரவர் வசதிற்கேற்ப வாகன வசதிகள் தேவையாகி விட்டன.
16 ஆண்டுகளில் 44 லட்சம் வாகனங்கள்
1991-ம் ஆண்டில் 96 லட்சமாக இருந்த தில்லியின் மக்கள் தொகை தற்போது 1.70 கோடியைத் தாண்டிவிட்டது. மலைக்க வைக்கும் வகையில், வாகனங்களும் அதிகரித்து வருகின்றன.
தில்லியில் 1975-ம் ஆண்டில் 2.35 லட்சமாக இருந்த வாகன எண்ணிக்கை 1996-ல் 26.29 லட்சமாகவும் தற்போது 70 லட்சத்தைக் கடந்துவிட்டது.
ஆனால், வாகன அதிகரிப்புக்கு ஏற்ப அவற்றை நிறுத்துவதற்கு இட வசதி இல்லாததால் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களைப் பயன்படுத்துவோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
லாரிகள், பஸ்கள் போன்ற கனரக வாகனங்கள் இடமின்றி சாலைகளில் நிறுத்தும்போக்கும் உருவாகிவிட்டது.
வாகன நிறுத்துமிட கட்டுமானப் பணிகள்
வாகனங்களை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பல அடுக்கு பார்க்கிங் மையங்களின் கட்டுமானப் பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை.
பாஹர்கஞ்சில் உள்ள ஷீலா சினிமா வாகன நிறுத்துமிடம் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மற்றவை முழுமையாக முடியவில்லை.
பல அடுக்கு, தானியங்கி வாகன நிறுத்துமிடங்களை உரிய காலத்தில் கட்டி முடிக்க தில்லி ஜல் போர்டு, இந்திய தொல்லியல் துறை ஆகியவை உரிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று தில்லி மாநகராட்சி (எம்.டி.சி.) அதிகாரிகள் புகார் கூறுகின்றனர்.
ஆனால், இது நகரின் முக்கியப் பிரச்னை என்பதை சம்பந்தப்பட்ட துறையினர் எப்போது உணரப் போகிறார்கள்?
பார்க்கிங் கட்டணம்
தில்லி உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட தில்லி அரசின் தலைமைச் செயலர் பி.கே. திரிபாதி தலைமையிலான "சிறப்புப் பணிக் குழு' (ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்), மாநகராட்சிகளில் உள்ள காலனிகளில் சாலையோரங்களில் குடியிருப்போர் நிறுத்தும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணங்களை விதிப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தில்லி மாநகராட்சியை கேட்டுக் கொண்டுள்ளது.
இதனால் வாகனப் பெருக்கம் கட்டுப்படுத்தப்படும் என்ற கூறப்படுகிறது. ஆனால், குடியிருப்போர் நலச் சங்கத்தினர் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு ஆணையத்தின் தலைவர் புரே லால், இந்த முடிவால் தில்லியில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பது குறையும் என்று கூறியுள்ளார்.
"குடியிருப்புக் காலனிகளில் வசிப்போர் சாலையில் நிறுத்தும் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணத்தை வசூலிப்பதற்கு முன்பு அதனால் ஏற்படும் சாதக, பாதங்களை அரசு நன்றாக ஆலோசிக்க வேண்டும்.
தகுந்த பொதுப் போக்குவரத்து வசதி இல்லாததும் கார்கள் போன்ற வாகனப் பெருக்கத்திற்கு காரணம்' என்று ஓய்வுபெற்ற அரசு ஊழியரான தசரதபுரியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சுட்டிக் காட்டினார்.
பொதுப் போக்குவரத்தை அதிகப்படுத்துவதே தீர்வு
"தில்லியில் தனிநபர் வாகனப் பயன்பாட்டை குறைப்பதற்கு பொதுப் போக்குவரத்தை திறம்பட மேலாண்மை செய்வது அவசியமாகும்.
தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் ஏ.சி. பஸ்களை அலுவலகம் செல்வோர், தனியார் நிறுவனங்களில் பணி புரிவோர் முழுமையாகப் பயன்படுத்திட வழிவகை செய்ய வேண்டும்.
அலுவலகம் செல்வோர் பெரும்பாலும் குறித்த நேரத்தில் செல்ல வேண்டும் என்பதற்காகக் காரைப் பயன்படுத்துகின்றனர்.
அந்தந்த குடியிருப்புக் காலனிகளில் இருந்து ஏ.சி. பஸ்களை காலை, மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் இயக்கும்போது காரைத் தவிர்த்து பஸ்களில் அவர்கள் செல்லக்கூடும்.
மேலும், பஸ் நிறுத்தங்களில் ஜி.பி.எஸ். கருவிகளைப் பொருத்தி பஸ் வரும் நேரம், பயண இடம் பற்றிய தகவல்களைத் தெரிவிக்க ஏற்பாடு செய்தால் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த அதிக மக்கள் முன்வருவர்.
காலனிகளுக்கு அருகே இருக்கும் சாலைகள், தெருக்களில் நிறுத்தப்படும் கார்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூலிப்பது என்பது மாநகராட்சியின் கஜானாவை நிரப்பத்தான் வழிவகுக்கும்' என்று மயூர் விஹார் ஃபேஸ் 3 பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன முதுநிலை மேலாளர் எஸ். கிருஷ்ணசுவாமி தெரிவித்தார்.