தேர்தல் விதிமீறல்! மதுரை ஆட்சியர், ஆணையரை இடமாற்றம் செய்ய தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு!
மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்பிருப்பதாக மாவட்ட ஆட்சியர், ஆணையரை இடமாற்றம் செய்யுமாறு பாஜக மனு தாக்கல்
மதுரையில் தேர்தல் விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்பிருப்பதாக மாவட்ட ஆட்சியர், ஆணையரை இடமாற்றம் செய்ய வேண்டுமென பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பாஜக ஐடி விங் தலைவர் ஜெயசிங் பேசுகையில், "மதுரை ஆட்சியர் மற்றும் மாவட்ட ஆணையரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் தமிழக தலைமைச் செயலாளரிடம் மனு சமர்ப்பித்துள்ளேன்.
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், ஏற்கெனவே நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவுகளை இவர்கள் மீறியுள்ளனர். உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக, இதே மாவட்ட ஆட்சியர் 144 ஆவது பிரிவு நடவடிக்கைகளை வெளியிட்டார்.
இவர்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே, இவர்கள் இருவரையும் மதுரையிலிருந்து வேறு இடங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், அவர்களை இடமாற்றம் செய்யக்கோரி, உயர்நீதிமன்றத்தையும் அணுகுவேன்" என்று தெரிவித்தார்.