நோயாளிக்கு அலட்சியமாக வைத்தியம் செய்ததால் காலில் 40 சதவீதம் ஊனம் ஏற்பட்ட நோயாளிக்கு சம்பந்தப்பட்ட மருத்துவமனையும், 2 மருத்துவர்களும் ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தில்லி நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட அசோக் விஹார் பகுதியைச் சேர்ந்த லலித் சாயல் என்பவர் தாக்கல் செய்த மனுவில்:
1993ஆம் ஆண்டு எனது இடது காலில் முறிவு ஏற்பட்டது. சிகிச்சைக்காக அசோக் விஹார் பகுதியில் உள்ள சுந்தர்லால் ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். 5 நாள்கள் கழித்து எனது காலில் பிளேட் வைத்து அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் கடுமையான வலி ஏற்பட்டது. அத்துடன் எனது காலில் உணர்ச்சி குறைந்து நரம்புகள் செயலிழந்துவிட்டன.
இதையடுத்து, 1994-இல் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாலும், மருத்துவர்களின் அலட்சியத்தாலும் எனது கால் செயலிழந்துவிட்டதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 23 ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு வருகிறேன் என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவரும் நீதிபதியுமான வீனா பிர்பால், உறுப்பினர் சல்மா நூர் பிறப்பித்த உத்தரவு:
காலில் முறிவு ஏற்பட்டு காலில் ரத்தக் கசிவுடன் இருந்த லலித் சாயலுக்கு அவசரமாக பிளேட் வைக்கும் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய விளக்கத்தை மருத்துவமனை அளிக்கவில்லை.
இது மருத்துவர்களின் அலட்சியமும் கூட. இதனால் 40 சதவீதம் ஊனம் ஏற்பட்டுள்ள லலித் சாயல், கடந்த 23 ஆண்டுகளாக தொடர் சிகிச்சை பெற்று வருகிறார். அவருடைய வருங்கால வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், அலட்சியமாக சிகிச்சை அளித்த இரண்டு மருத்துவர்கள் தலா ரூ. 5 லட்சமும், மருத்துவமனை ரூ. 10 லட்சமும் லலித் சாயலுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.