முகப்பு
புதுதில்லி

"காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும்' 

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் வியாழக்கிழமை 

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

காற்று மாசுவைக் கட்டுப்படுத்த அனைவரும் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்று மாநிலங்களவையில் வியாழக்கிழமை நடைபெற்ற காற்று மாசு தொடர்பான குறுகிய நேர விவாதத்தின் போது வலியுறுத்தப்பட்டது. தலைநகர் தில்லியில் ஏற்படும் காற்றுமாசு தொடர்பாக மாநிலங்களவையில் வியாழக்கிழமை குறுகிய நேர விவாதம் நடைபெற்றது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் கனிமொழி (திமுக),  டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்),  ஏ.நவநீத கிருஷ்ணன் (அஇஅதிமுக) ஆகியோர் பங்கேற்றுப் பேசினர். அதன் விவரம் வருமாறு:
கனிமொழி (திமுக):  மாறி வரும் பருவநிலை மாற்றம்,  சுற்றுச்சூழல் காரணமாக குடிநீர் பாட்டில்களைக் கடைகளில் பணம் கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது. தலைநகரில் ஏற்படும் காற்று மாசு தொடர்ந்தால் ஆக்ஸிஜன் உருளைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.  இதைத் தடுக்க வேண்டும். தில்லியைப் போன்று தமிழகத்தில் தொழில் நகரங்களான எண்ணூர், ஆலந்தூர், கடலூர் சிப்காட் பகுதிகளிலும் காற்று மாசுபட்டுள்ளது.
டி. ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்):  காற்றுமாசு தற்போது உலகளாவிய பிரச்னையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இயக்கவியல் விதியின்படி  நிலம், காற்று, நீர், மனிதர்கள் ஆகியவற்றுக்கு இடையே சமநிலை இருக்க வேண்டும். ஆனால், பேராசை பிடித்த, லாபம் ஈட்டும் எண்ணம் கொண்ட சக்திகளால் இயற்கை அழிக்கப்பட்டு வருகிறது. நாட்டின் அனைத்து நகரங்களிலும் காற்றின் மாசுவை கண்டறிய கண்காணிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும்.
ஏ.நவநீத கிருஷ்ணன் (அதிமுக): தலைநகர் தில்லியில் காற்று மாசுவைக் கட்டுப்படுத்த உச்ச நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் பல்வேறு உத்தரவுகளை தொடர்ந்து பிறப்பித்து வருகின்றன.  அனைவரும் தரமான காற்றை சுவாசித்து உயிர் வாழும் உரிமை குறித்து அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.  காற்று மாசுவைக் கட்டுப்படுத்த பொதுப் போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்த தொடங்க வேண்டும்.
 

முழு கட்டுரையைப் படிக்க →