ரூ. 7 லட்சம் லஞ்சம்: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன்னாள் துணை இயக்குநருக்கு 3 ஆண்டு சிறை
ஒடிஸாவில் உள்ள தனியார் மின்சாரம் மற்றும் எஃகு தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில்
ஒடிஸாவில் உள்ள தனியார் மின்சாரம் மற்றும் எஃகு தொழிற்சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்க ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகத்தின் முன்னாள் துணை இயக்குநர் நீரஜ் கட்டாரியாவுக்கு சிபிஐ நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
கடந்த 2013, ஜனவரி மாதம் தெற்கு தில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சின்மயா என்பவரிடம் இருந்து ரூ. 7 லட்சம் லஞ்சம் வாங்கியபோது கட்டாரியாவை சிபிஐ அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.
சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், சிபிஐ சிறப்பு நீதிபதி என்.கே. மல்ஹோத்ரா வியாழக்கிழமை தீர்ப்பளித்தார். அதில், லஞ்சம் வழங்கி தனியார் தொழிற்சாலையின் இயக்குநர் சுரேஷ் ஜோஷி, லஞ்சம் பெற்ற மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் துணை இயக்குநர் நீரஜ் கட்டாரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறைத் தண்டனையும், இடைத்தரகர் ராஷிரி அச்சுதாநந்தா ஸ்ரீசந்திரனுக்கு இரண்டு ஆண்டும், அவரது மகன் சின்மயாவுக்கு ஒராண்டும் சிறை தண்டனை வதிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தண்டனைப் பெற்ற 5 பேருக்கும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.