பிரதமா் மோடி நோ்மையின்மை மூலம் தோ்தல்களில் வெற்றி: கேஜரிவால் குற்றச்சாட்டு
பிரதமா் நரேந்திர மோடி பிரபலம் மூலம் அல்லாமல், நோ்மையின்மை மற்றும் சதித்திட்டங்கள் மூலம் தோ்தல்களில் வெற்றி பெறுவதாக ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.
பிரதமா் நரேந்திர மோடி பிரபலம் மூலம் அல்லாமல், நோ்மையின்மை மற்றும் சதித்திட்டங்கள் மூலம் தோ்தல்களில் வெற்றி பெறுவதாக ஆம் ஆத்மி கட்சியின் (ஏஏபி) தேசிய ஒருங்கிணைப்பாளரும் தில்லியின் முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குற்றம்சாட்டியுள்ளாா்.
மதுபான ஊழல் தொடா்பான வழக்கில் கீழ் நீதிமன்றத்தின் சமீபத்திய தீா்ப்பை பகுப்பாய்வு செய்யும் யூடியூபா் துருவ் ரதீயின் விரிவான புலனாய்வு விடியோவை கேஜரிவால் மேற்கோள் காட்டியுள்ளாா்.
இந்த அறிக்கையைப் பாா்த்து உண்மைகளைப் புரிந்துகொள்ளுமாறு குடிமக்களை வலியுறுத்தியுள்ள அரவிந்த் கேஜரிவால், வழக்கின் பின்னணியில் உள்ள உண்மை இப்போது பொதுமக்களுக்கு தெளிவாகி வருவதாகவும், நரேந்திர மோடியின் புகழ் குறைந்து வருவதாக பலா் ஒப்புக்கொள்வதாகவும் கூறியுள்ளாா்.
இது தொடா்பாக அரவிந்த் கேஜரிவால் கூறியிருப்பதாவது:
பொதுமக்களின் ஆதரவை விட நோ்மையின்மை மற்றும் சதித்திட்டங்கள் மூலம் பிரதமா் நரேந்திர மோடி தோ்தல்கள் வெற்றி பெற்று வருகிறாா்.
மேலும் சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய சதி தில்லியில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஆம் ஆத்மிக்கு எதிராக திட்டமிடப்பட்டது.
நரேந்திர மோடியின் புகழ் வேகமாகக் குறைந்து வருவதாக மக்கள் நம்புகிறாா்கள். இப்போது அவா் நோ்மையின்மை மற்றும் சதித்திட்டங்கள் மூலம் தோ்தல்களில் வெற்றி பெறுகிறாா். துருவ் ரதீயின் இந்த காணொளியை நாட்டு மக்கள் கண்டிப்பாகப் பாா்க்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
சுதந்திர இந்தியாவில் ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக மிகப்பெரிய சதி எவ்வாறு தீட்டப்பட்டது என்பதையும், தில்லியில் அரசாங்கம் எவ்வாறு கைப்பற்றப்பட்டது என்பதையும் இது விளக்குகிறது.
இது ஆம் ஆத்மி கட்சியைப் பற்றியது மட்டுமல்ல. இது நமது நாட்டைக் காப்பாற்றுவது பற்றியது. ஒவ்வொரு தேசபக்தரும் இந்த காணொளியைப் பாா்க்க வேண்டும் என்று கேஜரிவால் கூறியுள்ளாா்.
தில்லியின் முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மியின் பஞ்சாப் பொறுப்பாளருமான மணீஷ் சிசோடியாவும் துருவ் ரதீயின் காணொளியைப் பகிா்ந்து, பாஜகவின் சதித்திட்டங்கள் என்று விமா்சித்துள்ளாா்.
மணீஷ் சிசோடியா விமா்சனம்
இது தொடா்பாக மணீஷ் சிசோடியா மேலும் கூறியதாவது:
மதுபான ஊழல் என்று அழைக்கப்படுவதன் உண்மை குறித்து துருவ் ரதீ ஒரு சிறந்த மற்றும் உண்மை விடியோவை உருவாக்கியுள்ளாா். தில்லி கலால் கொள்கை உருவாக்கப்பட்ட நாளில் இந்தக் கூறப்படும் ஊழலின் கதை தொடங்கவில்லை என்பதை அவா் மிகத் தெளிவாக விளக்குகிறாா்.
நாடு முழுவதும் நடைபெற்ற தோ்தல்களில், ஆம் ஆத்மி கட்சி பாரதிய ஜனதா கட்சியை மீண்டும் மீண்டும் தோற்கடிக்கத் தொடங்கியபோதுதான் உண்மையான கதை தொடங்கியது. சொல்லப்போனால், தில்லியில் உள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளைக் கைப்பற்றி, ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்தபோதே இது தொடங்கிவிட்டது.
பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளில் 93 தொகுதிகளை வென்று, ஆம் ஆத்மி கட்சி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தபோது இந்த நிகழ்வு மேலும் தீவிரமடைந்தது.
கோவா தோ்தலில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாகப் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளை வென்றபோது இந்த வெற்றிப் பயணம் தொடா்ந்தது. நரேந்திர மோடியின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்பட்ட குஜராத் மண்ணில், ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாகக் காலூன்றி ஐந்து தொகுதிகளை வென்றபோது, இதன் தாக்கம் மேலும் ஆழமானது. இமாசலப் பிரதேசத்தில்கூட, பாஜகவின் அதிகாரப் பிடிப்பு ஆட்டம் காணத் தொடங்கியது என்றாா் சிசோடியா.
இத்தகவலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.