திமுகவுக்கு ஆதரவாக அரவிந்த் கேஜரிவால் பிரசாரம்! ஏப்.20 தமிழகம் வருகிறார்!!
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதைப் பற்றி...
முதல்வர் ஸ்டாலினுக்கு ஆதரவாக தில்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
தமிழ்நாட்டில் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 8 நாள்களே இருக்கும் நிலையில், தேர்தல் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தவெக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோரும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மத்தியில் ஆளும் கட்சியான பாஜக சார்பில் பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தேவேந்திர ஃபட்னவீஸ், பஜன்லால் சர்மா உள்ளிட்டோரும் தமிழ்நாட்டுக்கு வந்து பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், தில்லியின் முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் வருகிற ஏப். 20 ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
இரண்டு நாள்கள் சென்னையில் முகாமிட்டிருக்கும் கேஜரிவால், முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக பேரணிகள் மேற்கொண்டு பிரசாரம் செய்யவுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இடம்பெற்றிருந்த திமுகவுக்கு ஆதரவாகக் கூட்டணியை வலுப்படுத்தும் நோக்கில் கேஜரிவால், தமிழகம் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.