ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகித்ததாக கூறி தில்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏ சுரேந்தர் சிங்கை பதவியில் இருந்து தகுதி நீக்கக் கோரிய மனுவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார்.
தில்லி ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ சுரேந்தர் சிங். இவர் ஆதாயம் தரும் இரட்டைப் பதவியை வகித்து வருவதாக புகார் தெரிவித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு மனு அனுப்பப்பட்டிருந்தது. அதில், சுரேந்தர் சிங் எம்எல்ஏ தில்லி அரசின் பொதுப் பணித் துறையில் இருந்து ஆதாயம் ஈட்டி வருவதாகவும், அதேபோன்று, புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் (என்டிஎம்சி) இருந்தும் ஆதாயம் ஈட்டி வருவதாகவும் இதனால் அவரை எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை நிராகரித்து குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள உத்தரவில், "சுரேந்தர் சிங் எம்எல்ஏ என்டிஎம்சி சட்டத் தகுதியால் அவர் புது தில்லி முனிசிபல் கவுன்சிலில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இதனால், அவரது நியமனத்திலோ அல்லது நீக்கத்திலோ அரசுக்கு எவ்வித பங்கும் இல்லை. அதேபோன்று, தேசியத் தலைநகர் பிராந்திய தில்லி சட்ட ம் 15(1) பிரிவின் வரம்பிக்குள்பட்ட அரசின் கீழ் சுரேந்தர் சிங் பதவியை வகிக்கவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கெனவே தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இதுபோன்ற ஒரு மனுவை தேர்தல் ஆணையம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.