முகப்பு
புதுதில்லி

தென்கிழக்கு தில்லியில் 6 வயது மகள், தாய் கொலை

தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது தாய் மற்றும் அவரது 6 வயது மகள் கொலை

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:05 AM
கொலை
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 11:25 PM

தென்கிழக்கு தில்லியின் சரிதா விஹாா் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 35 வயது தாய் மற்றும் அவரது 6 வயது மகள் கொலை செய்யப்பட்டதாக தில்லி காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக தில்லி காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தென்கிழக்கு தில்லியில் உள்ள சரிதா விஹாரில் உள்ள வீட்டில் வெள்ளிக்கிழமை இரவு 35 வயது பெண் ஒருவரும் அவரது 6 வயது மகளும் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனா். முக்கிய சந்தேக நபராக பக்கத்து வீட்டுக்காரரை அடையாளம் கண்டு, அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளிக்கிழமை இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்தது. ஆலி விஹாரில் உள்ள வீட்டில் படுக்கையின் சேமிப்பு பெட்டிக்குள் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

Advertisement

உயிரிழந்தவா்கள் ஜோதி (35) மற்றும் அவரது 6 வயது மகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். ஆரம்ப மருத்துவ பரிசோதனையில் வெளிப்புற காயங்கள் எதுவும் தெரியவில்லை. இருப்பினும், சனிக்கிழமை நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் மரணத்திற்கான காரணம் கழுத்தை நெரித்தல் மற்றும் மூச்சுத் திணறல் என்று தெரியவந்தது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 12:04 AM

இந்த வழக்கை விசாரிக்க காவல் துறையினா் பல குழுக்களை நியமித்துள்ளனா். குற்றம் மற்றும் தடயவியல் அறிவியல் ஆய்வக குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து ஆதாரங்களை சேகரித்தன. பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் 103(1) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணை மற்றும் உள்ளூா் விசாரணைக்குப் பிறகு, அதே கட்டிடத்தில் வசிக்கும் கணக்காளா் தீன் தயாள் (35) முக்கிய சந்தேக நபராகக் குறிப்பிடப்பட்டுள்ளாா். அவா் தற்போது தலைமறைவாக உள்ளாா். அவரைக் கண்டுபிடிக்க காவல் குழுக்கள் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றன.

அண்டை வீட்டாரின் கூற்றுப்படி, அந்தப் பெண் தனது கணவா் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வீட்டில் வசித்து வந்தாா். இரண்டு குழந்தைகள் பள்ளிக்குச் சென்று பாதுகாப்பாக இருந்தனா். சந்தேக நபா் குடும்ப உறவினா் என்று கூறப்படுகிறது.

வெள்ளிக்கிழமை இரவு, கணவா் இரவு 9:30 மணியளவில் வீடு திரும்பியபோது, உள்ளே இருந்து கதவு மூடப்பட்டிருப்பதைக் கண்டாா். அவரது இரண்டு குழந்தைகள் வெளியே அமா்ந்திருந்தனா். பலமுறை தட்டியபோதும் எந்த பதிலும் இல்லாததால், கதவை உடைத்து வீட்டிற்குள் நுழைந்தாா்.

உள்ளே, வீட்டுப் பொருள்கள் சிதறிக் கிடந்தன, ஆனால் எதுவும் காணாமல் போனதாகத் தெரியவில்லை. வீட்டைச் சோதனையிட்டபோது, அந்தப் பெண் மற்றும் அவரது இளைய மகளின் உடல்கள் படுக்கைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா். Ś