தில்லி அரசைக் கண்டித்து 12-இல் மனோஜ் திவாரி உண்ணாவிரதம்
வடகிழக்கு தில்லியை ஆம் ஆத்மி அரசு புறக்கணிப்பதாக எதிர்ப்புத் தெரிவித்து ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்
வடகிழக்கு தில்லியை ஆம் ஆத்மி அரசு புறக்கணிப்பதாக எதிர்ப்புத் தெரிவித்து ஏப்ரல் 12- ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி திங்கள்கிழமை தெரிவித்தார்.
தில்லி பாஜகவின் மாதாந்திரக் கூட்டம் மனோஜ் திவாரி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் தில்லியில் நடைபெற்ற ரேஷன் முறைகேடு, குடிநீர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பாஜக தேசிய செயலர் அனில் ஜெயின், தில்லி பாஜக செயலாளர்கள் குல்ஜீத் சிங் சாகல், ரவீந்தர் குப்தா, ராஜேஷ் பாட்டியா, மேயர்கள் ப்ரீத்தி அகர்வால் (வடக்கு தில்லி), கமல்ஜீத் ஷெராவத் (தெற்கு தில்லி) உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவின் தேசிய செயலர் அனில் ஜெயின் கௌரவிக்கப்பட்டார்.
நிகழ்ச்சியில் மனோஜ் திவாரி பேசியதாவது: தில்லி அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
வடகிழக்கு தில்லி மக்கள் என்னைத் தங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக வடகிழக்கு தில்லியில் வளர்ச்சிப் பணிகளுக்கு தில்லி
அரசு முட்டுக்கட்டை போடுகிறது.
இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக எவ்வித வளர்ச்சிப் பணிகளும் நடைபெறவில்லை. பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டு வரும் தில்லி அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வரும் 12-ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடவுள்ளேன் என்றார் அவர்.