முகப்பு
புதுதில்லி

டிடிசி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஆஷிஷ் கேதான் ராஜிநாமா

தில்லி டயலாக் ஆணையத்தின் (டிடிசி) துணைத் தலைவர் பதவியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் கேதான் ராஜிநாமா 

Updated On : 19 ஏப்ரல் 2018, 1:04 am IST
பகிர்:

தில்லி டயலாக் ஆணையத்தின் (டிடிசி) துணைத் தலைவர் பதவியில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களில் ஒருவரான ஆஷிஷ் கேதான் ராஜிநாமா செய்துள்ளார். வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட விரும்பியதால் தனது பதவியை ராஜிநாமா செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளரும், அரசியல்வாதியுமான ஆஷிஷ் கேதான், முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் நம்பிக்கைக்குரிய நபர். இவர் தில்லி அரசுக்கு ஆலோசனை அளிக்கும் தில்லி டயலாக் ஆணையத்தின் (டிடிசி) துணைத் தலைவராக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நியமிக்கப்பட்டார். இந்த அமைப்பின் தலைவராக முதல்வர் கேஜரிவால் இருந்து வருகிறார். இந்நிலையில், டிடிசி துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகிவிட்டதாக ஆஷிஷ் கேதான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சுட்டுரை (டுவிட்டர்) வலைதளப் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஏப்ரல் 16-ஆம் தேதி டிடிசி துணைத் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளின் போது அரசுக் கொள்கைத் திட்டத்தை வடிவமைப்பதிலும், அரசின் நிர்வாகத்தில் சீர்திருத்தம், மாற்றம் கொண்டு வருவதிலும் ஒரு தனித்துவமிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த அற்புதமான வாய்ப்பை அளித்ததற்காக முதல்வர் கேஜரிவாலுக்கு கடைமைப்பட்டிருக்கிறேன். நான் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபட உள்ளேன். இந்திய பார் கவுன்சிலில் பதிவு செய்ய உள்ளேன். இதற்காகவே டிடிசியில் இருந்து பதவி விலகினேன். அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பில் எந்த வகையில் இருந்தாலும் வழக்குரைஞர் தொழிலில் ஈடுபடுவதை பார் கவுன்சில் விதிகள் தடுக்கின்றன. வழக்கமான வழக்குகள் தவிர, பொது நலன் கருதி சட்ட வழக்குகளையும் எடுத்துக் கொள்ள உள்ளேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.