கொசுவால் பரவும் நோய்களை கட்டுப்படுத்த பள்ளிகளில் விழிப்புணர்வுப் பிரசாரம்
கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சிப் பள்ளிகளில்
கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அம்மாநகராட்சி மேயர் நரேந்தர் சாவ்லா திங்கள்கிழமை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
தில்லியில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கொசுக்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது. கொசுப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கொசுக்களால் பரவக் கூடிய மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் தொடர்பாக மாநகராட்சிப் பள்ளிகளில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தின் ஒருபகுதியாக மாநகராட்சிப் பள்ளிகளில் கொசுக்களால் பரவும் நோய்கள் தொடர்பான விளக்கப் பலகைகள், சுவரொட்டிகள் ஆகியவை வைக்கப்படவுள்ளன. இவற்றில், கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் தொடர்பாக விளம்பரப்படுத்தவுள்ளோம்.
மேலும், மாநகராட்சிப் பள்ளி வளாகங்களில் கொசுப் பெருக்கத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அதிகாரிகளைக் கேட்டுள்ளேன். இந்த கொசுக்கள் பகலிலும் கடிக்கக் கூடியவை என்பதால், மாணவர்களை முழுக்கை சட்டை அணிந்து பள்ளிக்கு வருமாறு கேட்டுள்ளோம் என்றார் அவர்.