மெட்ரோ ரயில் முன் குதித்து இளைஞர் தற்கொலை முயற்சி
தில்லியில் ஐஏஎஸ் தேர்வுக்காக படித்து வந்த இளைஞர் மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
தில்லியில் ஐஏஎஸ் தேர்வுக்காக படித்து வந்த இளைஞர் மெட்ரோ ரயில் முன் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை டிஎம்ஆர்சி ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து தில்லி மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (டிஎம்ஆர்சி) அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தில்லி கரோல் பாகில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் திங்கள்கிழமை காலை சுமார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞர் நடைமேடையில் நின்று கொண்டிருந்தார். காலை சுமார் 9.30 மணியளவில் மெட்ரோ ரயில் நிலையத்திற்குள் வந்துகொண்டிருந்த நொய்டாவுக்கு செல்லும் ரயில் முன் குதித்து அந்த இளைஞர் தற்கொலைக்கு முயன்றார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் தற்கொலைக்கு முயன்றவர் மும்பையை பூர்விகமாக கொண்டவர் என்பதும், கிழக்குத் தில்லி நிர்மாண் விஹாரில் தனது நண்பருடன் தங்கியிருந்தும், ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படித்து வந்ததும் தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்ற விவரம் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தால் புளூலைன் வழித்தடத்தில் சிறிதுநேரம் ரயில் சேவையில் தடங்கல் ஏற்பட்டது. பின்னர், வழக்கம்போல் ரயில் சேவை மேற்கொள்ளப்பட்டது என்றார் அந்த அதிகாரி.