பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் தொடரும் தீ!
தில்லியில் உள்ள பல்ஸ்வா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் தொடர்ந்து சில நாள்களாக தீ புகை இருந்து வருகிறது.
தில்லியில் உள்ள பல்ஸ்வா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் தொடர்ந்து சில நாள்களாக தீ புகை இருந்து வருகிறது. இதனால், தலைநகரில் மாசு அளவு அதிகரிக்கும் என்ற கவலை ஏற்பட்டுள்ளது.
தில்லியில் காற்றின் தரம் ஞாயிற்றுக்கிழமை மிகவும் மோசமான பிரிவில் இருந்தது. இந்நிலையில், இது அடுத்து வரும் சில தினங்களில் நீடிக்கலாம் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் எச்சரித்திருந்தனர்.
இது ஒருபுறம் இருக்க, அக்டோபர் 20-ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பல்ஸ்வா குப்பைக் கிடங்கு தீப்பற்றி எரியத் தொடங்கியதாகவும், அதை அணைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மூன்று தீயணைப்பு வாகனங்கள் குப்பைக் கிடங்கு பகுதியில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இதனிடையே, பல்ஸ்வா குப்பைக் கிடங்கு பகுதியில் திங்கள்கிழமை பிற்பகலுக்கு முன்பாக தீ அணைக்கப்பட்டு விட்டதாக வடக்குத் தில்லி மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேவேளையில், சம்பவ இடத்தில் தொடர்ந்து தீ எரிந்து வருவதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். பல்ஸ்வா குப்பைக் கிடங்கு வடக்கு தில்லி மாநகராட்சி எல்லைக்குள் உள்ளது. 50 மீட்டர் உயரம் உள்ள இந்தக் குப்பைக் கிடங்கு ஏற்கெனவே அதன் கொள்ளளவைக் கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
மோரி கேட் பகுதியில்: மோரி கேட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில் 2 வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின. எனினும் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து தீயணைப்பு துறை அதிகாரி கூறுகையில், "திங்கள்கிழமை காலை 10.30 மணியளவில் மோரி கேட் பகுதியில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் தீப்பற்றி எரிவதாக தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்பட்டு காலை 10.55 மணிக்குள் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீஸ் ஹஸாரி நீதிமன்றம் பின்புறம் உள்ள மோரி கேட் வாகன நிறுத்துமிடத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் பேருந்து, கார் தீயில் எரிந்தன. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.