பட்டாசு தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல்
பட்டாசு தொழிற்சாலைகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் 3(பி) விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
பட்டாசு தொழிற்சாலைகளை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் 3(பி) விதியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா வலியுறுத்தினார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை அவர் முன்வைத்த கோரிக்கை: பசுமைப் பட்டாசுகளை மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக நாடு முழுவதும் 1,075 பட்டாசு ஆலைகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றில் தமிழகத்தில் சிவகாசியில்உள்ள 840 பட்டாசுத் தயாரிப்பு ஆலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், பாரம்பரிய பட்டாசுகளை விட, பசுமைப் பட்டாசுகள் 30 சதவீதம் மட்டுமே குறைந்த மாசுபடுத்திகளைக் கொண்டுள்ளது. பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளதால், தமிழகத்தின் பொருளாதாரத்தின் மீது தொடர் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 8 லட்சம் தொழிலாளர்கள் வீதிக்கு வந்துள்ளனர். இவர்கள் படும் துயரை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் பட்டாசு ஆலைகள் அதிகளவில் வேலைவாய்ப்பை அளித்து வருகின்றன. எனவே, சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986-இன் 3(பி) விதியில் இருந்து பட்டாசு ஆலைகளுக்கு விலக்கு அளிக்க அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.
குற்றாலத்தை மேம்படுத்த நிதி: குற்றாலத்தை மேம்படுத்த ரூ.100 கோடி தொகுப்பு நிதியை ஒதுக்க வேண்டும் என்று மக்களவையில் அதிமுக வலியுறுத்தியது. இது தொடர்பாக மக்களவையில் தென்காசி தொகுதி அதிமுக உறுப்பினர் எம். வசந்தி செவ்வாய்க்கிழமை முன்வைத்த கோரிக்கை:
தமிழகத்தில் குற்றாலம் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று. இங்கு ஏராளமான அருவிகள் உள்ளன. சித்தாறு, மணிமுத்தாறு, பச்சையாறு, தாமிரபரணி ஆகியவை இந்தப் பிராந்தியத்தில் உற்பத்தியாகின்றன. இங்கு 9 நீர்வீழ்ச்சிகள் உள்ளன.
இவற்றில் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளைச் சென்றடைய சாலை வசதிகள் உள்ளன. இதுபோன்று தேனருவி, செண்பக அருவியும் உள்ளன. ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு வரும் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதிகளைச் செய்து வரும் வகையில் குற்றாலம் நகரைச் சுற்றிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் வகையிலும், குற்றாலத்தை முன்னணி சுற்றுலாத் தலமாக மேம்படுத்தும் வகையிலும் ரூ.100 கோடி விரிவான தொகுப்பு நிதியை அளிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.