குருகிராமில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த பெண், விவசாயக் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
இதுதொடர்பாக போலீஸார் கூறியதாவது: தில்லியில் உள்ள நஜஃப்கர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் குருகிராமில் உள்ள ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த வியாழக்கிழமை தனது வீட்டின் முன்பாக அவர் நின்று கொண்டிருந்தார்.
இந்நிலையில், அவரைத் திடீரென காணவில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஹரியாணா மாநிலம், ஜஜ்ஜார் பகுதியில் உள்ள விவசாயக் கிணற்றில் பெண் சடலம் கிடப்பதாக அப்பகுதி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். அவர், காணாமல் போன அந்த இளம்பெண் என்பது தெரியவந்தது.
அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.