அயோத்தியில் ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்
ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை
ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை பதிவு செய்துள்ள வழக்குகளை திரும்பப் பெறக் கோரி அந்த மாநிலத்தில் உள்ள அயோத்தியில் புதன்கிழமை ஆம் ஆத்மி கட்சி ஆர்ப்பாட்டம் நடத்தியது.
மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி உறுப்பினரும், அக்கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவருமான சஞ்சய் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக சஞ்சய் சிங் கூறியதாவது: வாரணாசியில் உத்தரப் பிரதேச மாநில அரசு இந்துக் கோயில்களை அழித்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆம் ஆத்மி சார்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நான் உள்ளிட்ட 250 கட்சித் தொண்டர்கள் மீது அந்த மாநிலக் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், அதே தினத்தில் அயோத்தியில் 144 தடையுத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஆம் ஆத்மியை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தீவிரமாக உள்ளது. ஆனால், அவர்களின் அழுத்தங்களுக்கு ஆம் ஆத்மி கட்சி அடிபணியாது. ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் கண்டிக்கிறோம். இந்த வழக்குகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.