தெற்கு தில்லி, கோவிந்த் புரியில் நகைக்கடை ஒன்றில் அடையாளம் தெரியாத நான்கு பேர் வெள்ளி ஆபரணங்கள் மற்றும் ரொக்கம் ரூ.1.5 லட்சம் ஆகியவற்றைக் கொள்ளையடித்துச் சென்றனர். மோட்டார் சைக்கிளில் வந்து கொள்ளையடித்துச் சென்ற அவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது குறித்து காவல் துறை உயரதிகாரி கூறியதாவது: இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர். அதில் சிலர் முகமூடி அணிந்திருந்ததாக நகைக் கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார். அதில் ஒருவர் நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்துள்ளார்.
அவர்களை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த நகைக் கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை எனத் தெரிகிறது.
இருப்பினும் அக்கம்பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.