தகுந்த பயண ஆவணங்களின்றி நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியதாக கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 60 பேரில் 17 ஆண்கள் கழிப்பறையின் ஜன்னலை உடைத்து தப்பியதாக போலீஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்த விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ள போலீஸார், தப்பியவர்களைப் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து கௌதம் புத் நகர் மூத்த காவல் துறை கண்காணிப்பாளர் வைபவ் கிருஷ்ணா வெள்ளிக்கிழமை கூறுகையில், "காலாவதியான விசா, செல்லாத பாஸ்போர்ட் ஆவணங்கள் வைத்திருந்த 9 நாடுகளைச் சேர்ந்த 60 பேரை நொய்டாவில் வியாழக்கிழமை இரவு போலீஸார் பிடித்தனர். அவர்களை மேல் விசாரணைக்காக சூரஜ்பூர் ரிசர்வ் போலீஸ் லைன்ஸில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 17 ஆண்கள் அந்த அறையின் கழிப்பறையின் ஜன்னலை உடைத்து தப்பி விட்டனர். தப்பியவர்களைப் பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய நகர காவல் துறை கண்காணிப்பாளர் விணீத் ஜெய்ஷ்வாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னதாக, தகுந்த ஆவணங்களை வைத்திருந்ததாக 60 பேரில் 12 பேர் விடுவிக்கப்பட்டனர். தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நைஜீரியா, கென்யா, தான்ஜானியா, ஜாம்பியா, ஐவரி கோஸ்ட், அங்கோலா போன்ற ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் 28 பேர் பெண்களாவர்' என்றார்.
முன்னதாக, வெளிநாட்டவர்கள் தங்கியிருந்த குடியிருப்புகளில் போலீஸார் புதன்கிழமை நடத்திய சோதனையில் 222 மது பாட்டில்கள், 3.5 கிலோ போதைப் பொருள், ஆறு மடிக்கணினிகள், 114 சிம் கார்டுகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.