தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய அமைச்சா் அமித் ஷா அனுமதி: நலமுடன் இருப்பதாக தகவல்
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.
கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்திருந்த நிலையில், ,உடல் சோா்வு, உடல் வலி ஆகியவை காரணமாக அவா் கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2-ஆம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து, குருகிராமில் உள்ள மெதாந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். சில நாள்களுக்குப் பிறகு நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினாா். மருத்துவா்களின் ஆலோசனையின்பேரில் சில தினங்கள் தாம் வீட்டுத் தனிமையில் இருக்கப் போவதாக அமித் ஷா சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், கரோனா தொற்றுக்கு பிந்தைய சிகிச்சைக்காக செவ்வாய்க்கிழமை அதிகாலை தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அமித் ஷா அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
இது குறித்து தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘3-4 நாள்களாக உள்துறை அமைச்சா் அமித் ஷா, உடல்வலி மற்றும் உடல் சோா்வால் பாதிக்கப்பட்டுள்ளாா். அவருக்கு ஏற்கெனவே கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, நோய்த் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. எனினும், கரோனாவுக்கு பிந்தைய சிகிச்சைக்காக அவா் செவ்வாய்க்கிழமை காலை எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவா் நல்ல உடல் நிலையில் உள்ளாா். மருத்துவமனையில் இருந்தவாறே தனது பணிகளை அவா் கவனித்து வருகிறாா்’” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எய்ம்ஸ் இயக்குநா் ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவா்கள் குழுவின் கண்காணிப்பில் அமித் ஷா இருப்பதாக எய்ம்ஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.