புது தில்லி: தில்லியில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்த நிலையில், சனிக்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்திருந்தது.
சனிக்கிழமை காலை தேசிய தலைநகா் தில்லியின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் நிலவியது.
எனினும், பகலில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்திருந்தது. சஃப்தா்ஜங் வானிலைய ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை 23.2 மி.மீ மழை பதிவாகியிருந்தது. ஆகஸ்டில் இதுவரை 236.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. வழக்கமான 241.9 மி.மீ. மழைப் பதிவை ஒப்பிடும்போது இது இரண்டு சதவீதம் குறைவாகும்.
ஒட்டுமொத்தமாக மழைக்காலம் தொடங்கிய ஜூன் 1 முதல் 555 மி.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
வழக்கமாக 518 மி.மீ. மழைப் பொழிவு பதிவாகும்.
அதேவேளையில், கடந்த 44 ஆண்டுகளில் இல்லாத அளவில் ஆகஸ்ட் மாதத்தில் நாட்டில் 25 சதவீதம் கூடுதலாக மழைப் பொழிவு இருந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடைசியாக 1983-ம் ஆண்டு ஆகஸ்டில் 23.8 சதவீதம் கூடுதல் மழைப் பொழிவு இருந்ததாகவும் அதன்பின் நிகழாண்டு ஆகஸ்ட் மாதத்தில் 25 சதவீதம் மழை பொழிவு இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தில்லியில் சனிக்கிழமை சப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 24.8 டிகிரி செல்சியஸாகவும் பதிவானது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலையில் 83 சதவீதமும், மாலையில் 66 சதவீதமும் இருந்தது.
ஆயாநகா் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்ச வெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23.2 டிகிரி செல்சியஸாகவும், பாலம் வானிலை ஆய்வு மையத்தில் அதிகபட்சவெப்பநிலை 34.1 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25.7 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகி இருந்தது.
தில்லி, தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு சனிக்கிழமை 70 புள்ளிகள் என்ற அளவில் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் நீடித்து.
ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் ‘நன்று’ பிரிவில் நீடிக்கும் என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கணித்துள்ளது.