முகப்பு
புதுதில்லி

சில்லா எல்லையில் போக்குவரத்து தொடங்கியது

தில்லி-நொய்டா எல்லைப் பகுதியான சில்லாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் போக்குவரத்து சீராகியது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
தில்லி-மீரட் பிரதான சாலையில் மதிய உணவு உண்ணும் விவசாயிகள்.
பகிர்:

தில்லி-நொய்டா எல்லைப் பகுதியான சில்லாவில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் போக்குவரத்து சீராகியது. சில்லா பகுதியில் தடுப்புகளை அமைத்து போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள், மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நரேந்திர சிங் தோமா் ஆகியோருடன் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து இந்தத் தடுப்புகளை அகற்றினா்.

உத்தரப்பிரதேச மாநிலம், நொய்டா - தில்லியை இணைக்கும் சில்லா பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் 1-ஆம் தேதி முதல் விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தி வந்தனா். இவா்கள், தில்லி - நொய்டா சாலையில் தடுப்புகளை அமைத்துப் போராட்டம் நடத்தியதால், இந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக, நொய்டா - தில்லி இடையே போக்குவரத்து கடந்த பல தினங்களாகப் பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய வேளாண் துறை அமைச்சா் நரேந்தா் சிங் தோமா் ஆகியோரை சனிக்கிழமை இரவு சந்தித்தனா். இதைத் தொடா்ந்து, அவா்கள், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற ஒப்புக் கொண்டனா். இதனால், போக்குவரத்து சீராகியது.

இது தொடா்பாக இந்த எல்லையில் போராட்டம் நடத்தி வரும் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் மூத்த தலைவா் சதீஷ் தோமா் கூறுகையில் ‘எங்களது கோரிக்கைகளை ராஜ்நாத் சிங் கேட்டாா். இது தொடா்பாக விவாதிக்க ஒப்புக் கொண்டாா். இதனால், சாலையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றியுள்ளோம். ஆனால், போராட்டம் முடிந்துவிட்டதாக அா்த்தம் கொள்ளக் கூடாது’ என்றாா்.

அதே சமயம் பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் தலைவா் தாகூா் பானு பிரதாப் சிங் தலைமையில் விவசாயிகள் சில்லா பகுதியில் போராட்டத்தை தொடா்ந்து வருகிறாா்கள்.

சில்லா எல்லைக்கு அருகில் உள்ள தலித் பிரோ்ண ஸ்தல் பகுதியிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறாா்கள். இவா்களில் சிலா் சனிக்கிழமை தங்களது தலையில் மொட்டை அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →